Wednesday 18 May 2011

தொடரும்..............

காலாற கடற்கரைகளில் நடந்து கொண்டுதான்
இருக்கிறேன்....
கடல்நீர் கற்பனையைத் தாண்டி
காலை நனைத்துக் கொண்டே வருகிறது...
கரையில் கூக்குரல்கள்...
என்னைக் கரையேறச் சொல்லி!!!!
எல்லாமே காதுக்குத் தெளிவாய் கேட்கிறது...
ஏற்றமா இறக்கமா எனத் தெரியாமல்
நீருக்குள்  இறங்குகிறேன்..
முன்னைவிட வேகமாக ஒலிக்கும் குரல்கள்
கைக்கெட்டிய தூரத்தில் இருந்தும்
கைப்பிடித்து இழுக்க எவருமே இல்லை..
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள
ஒவ்வொருவரும் துடிக்கும் அந்த விடியற்காலையில்
நான் மட்டும்.......
உன்னைத் தொலைத்த அதே கடலில்!!!

Monday 16 May 2011

காத்திருப்பு

பாவம்....
வெள்ளிக்கிழமைகளில் மட்டும்தான்
நீ
கோவில் வருவாய் எனத் தெரியாமல்
ஒவ்வொரு நாளும் முழங்கிக் கொண்டிருக்கிறது
கோவில் மணி!

Saturday 14 May 2011

தேடல்

இணைய உலாவிகளில்
இன்னும் தொலைந்து கொண்டேதான்
இருக்கிறேன்.....
தேடல் இயந்திரங்களில்
உன் பெயர்
தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது..
நீ மட்டும்தான்
இன்னும் தென்படாமல்!
முகநூல்களில் உன்னைத் தேடி
விரல்கள் எல்லாம் விறைத்துக் கொண்டன
உன் முகம் மட்டும்
முகவரி எழுதப்படாமல்...

பள்ளித் தெருக்களில்
உன் பாதச் சுவடுகளை
வரைந்து வரைந்து பார்த்ததை
மனம் இன்னும்
பத்திரமாய் வைத்திருக்கிறது..
ஒற்றைச் சடையில் உட்கார்ந்த
அந்தக் காற்றை
விரட்டிய பொழுதுகள்...
இன்னும் நனவின் விளிம்புகளில்!
கண்ணால் மட்டுமே
காதல் சொன்ன.... உன்
அந்தக் கடைசி நிமிடங்களை
இன்னும்
கைகளில் கெட்டியாகப் பிடித்திருக்கறேன்!

தேடல் இயந்திரங்களில்
உன்னைத் தேடும் இரவுகளை
நான் விடப் போவதில்லை..
அயல் தேசத்தில்
நீ அடைக்கலமான பிறகும்!!

14 மே 2011